ரஷ்யாவில் இருந்து மேலும் 65 ஆயிரம் 'ஸ்புட்னிக் - வி' கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.
விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை இவை இலங்கையை வந்தடைந்தன என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இவற்றில் 15 ஆயிரம் தடுப்பூசிகள் இரண்டாம் டோஸாகச் செலுத்துவதற்கு ஒதுக்கப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏனைய 50 ஆயிரம் தடுப்பூசிகளும் கண்டி மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சில வாரங்களுக்கு முன்னர் முதலாம் கட்டமாக ரஷ்யாவில் இருந்து 15 ஆயிரம் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதுடன், அவை கொத்தட்டுவ பகுதி மக்களுக்கு ஏற்றப்பட்டன.
அவர்களுக்கு சில வாரங்களில் இரண்டாவது டோஸ் வழங்க வேண்டியுள்ளதால் இன்று கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகளில் ஒரு தொகுதியை அதற்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்